இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு இனி கச்சா எண்ணெய் விலை சரிவு சகாயத்தால், இதுவரை கண்ட பலன்களை அனுபவிப்பது சிரமம்.
இரு ஆண்டுகளுக்கு பின் அரசு பல்வேறு விஷயங்களை காரணம் காட்டினாலும், அதிக மக்கள் தொகை கொண்ட, பெடரலிச தத்துவத்தில் செயல்படும் மாநில அரசுகளையும் இணைத்து, பொருளாதார வளம் காணுமா என்பதே இன்றைய வினாவாகும்.
இதுவரை இல்லாத வகையில், 17 மாதங்களில் காணப்படாத வகையில் உணவுப்பொருள் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. பருப்பு வகைகள், சர்க்கரை, சில காய்கறிகள் விலை அதிகரித்திருக்கிறது. இதன் பாதிப்பு உடனடியாகத் தெரியாது என்றாலும், நுகர்வோர் பொருட்கள் விலை உயர்வு அதிகரிப்பை,அரசும், ரிசர்வ் வங்கியும் கவனிக்க வேண்டிய காலம் ஆகும்.
இந்த நேரத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பதவிக் காலம் முடிந்ததும், பதவி நீட்டிப்பு கூடாது என்ற கருத்தை, பா.ஜ., - எம்.பி., சாமி முன்வைத்து விட்டார். ஆனால், அதை மத்திய அரசும், நிதியமைச்சர் ஜெட்லியும் ஏற்கவில்லை.
ஏற்கனவே முந்தைய அரசு காலத்தில் நிதியமைச்சராக இருந்த, ப.சிதம்பரம் கூறியபடி, ரகுராம் ராஜன் இணைந்து செயல்படவில்லை என்பதும், இருவரும் பொருளாதார அணுகுமுறையில் இரு வேறு பாதைகளில் நடந்தனர் என்பதும், வெளிப்படையாக பேசப்பட்டது. இன்று பல்வேறு பொருளாதார விஷயங்களில் அரசு நடவடிக்கைகளும், ரிசர்வ் வங்கி செயல்களும் இணைந்தே உள்ளன.
அடிக்கடி மாநில சட்டசபைத் தேர்தல்கள் வரும்போது, மத்திய அரசு மேற்கொள்ளும் அடுத்தடுத்த பொருளாதார திட்டங்கள் முழுவதுமான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படாத நிலை இன்று உள்ளது.
மத்திய உணவுத் துறை அமைச்சர் பஸ்வன், நிதர்சனமான அரசியல்வாதி. பருப்பு வகைகளை மத்திய அரசு இறக்குமதி செய்திருப்பதாகவும், அதை மாநில அரசுகள் வாங்கி, தோல் நீக்கி சுத்தம் செய்து சந்தைக்கு கொண்டு சென்றால், 1 கிலோ அதிகபட்சமாக, 120 ரூபாய்க்குள் விற்கலாம் என்கிறார். மத்திய அரசு முயற்சியில் ஒத்துழைக்காத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இனிமேல் அந்த நிலை சற்று மாறலாம்.
இன்றைய நிலையில், ஆண்டு ஒன்றுக்கு, 1.2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தராவிட்டால், அது அரசு மேற்கொள்ளும் எல்லாத் திட்டங்களையும் பலன்தர செய்யாது.
நம் மக்கள் தொகை ஒரு பக்கம், பலமாக கருதப்பட்டாலும், அடுத்த, 20 ஆண்டுகளுக்கு, 20 முதல் 50வயதுடையவர்களுக்கு, அவரவர் தகுதி, திறன் அடிப்படையில் வேலை தர அரசு என்ன திட்டத்தை செயல்படுத்தப் போகிறது என்பது கேள்வியாகும்.
பொருளாதார சீர்திருத்தத்தை நம் அரசு பின்பற்றிய போதும், இதுவரை வேலைவாய்ப்பில் பல்வேறு துறைகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளை உருவாக்கும் சட்ட நடைமுறைகளே இருந்தன. திறன்மிகு தொழிலாள இளைஞர்களை உருவாக்குவதையும் கவனத்தில் கொள்ளவில்லை.
தொழிலாளர்கள் அதிகம் பேரை ஈடுபடுத்தி, உற்பத்தியை அதிகரிக்கும் தொழில் சார்ந்த துறை களை கண்டறிந்து, அவற்றை ஊக்குவிக்க தவறிவிட்டதாக, சில புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
உலக வங்கி அறிக்கையின்படி, தற்போது உலகம் முழுவதும், 108 கோடி இளைஞர்களுக்கு வேலையும் இல்லை; வேலைத்திறனை வளர்க்கும் பயிற்சிகளிலும் அவர்கள் ஈடுபடவில்லை. ஐரோப்பிய நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது.
ஆகவே, வேலைவாய்ப்பு தருவது சுலபமா என்ற கேள்வி எழுகிறது. விடை காண மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டிருப்பது நல்லது. அதே சமயம், தனியார் மூலதன முதலீடுடன் கூடிய வேலைவாய்ப்பு உருவாவது சிரமம்.
தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், துறைமுகங்கள் வளர்ச்சி, நகர்ப்புற அடிப்படை கட்டமைப்புகள் ஆகியவற்றில் அதிக வேலை தரும் திட்டங்களை அரசு அமல்படுத்த முயற்சிக்கிறது. நெசவு, தோல் தொழில்கள் ஆகியவையும் அதிக வேலைவாய்ப்பு தரும். அத்துறைகளும் நவீன உத்திகளுடன் ஏற்றுமதிப் போட்டிகளை சந்திக்கும் வகையில் வளர்ந்தாக வேண்டும். ஆனால், அந்தந்த மாநிலங்கள் அதற்கு வசதியாக, சில தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்தினால் ஒழிய, நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்குவது சிரமம்.
ஆகவே, மோடி அரசு இந்தப் பணியில் அக்கறை செலுத்த முற்படும் போது, மாநிலங்கள் ஒத்துழைப்பு எப்படி என்பது அலசப்படும்.
No comments:
Post a Comment